கோவை: கோவை நீதிமன்றம் அருகே வாலிபர் கொல்லப்பட்ட வழக்கில் மேலும் 3 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். கோவை நீதிமன்றம் அருகே பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட கோகுல் (25), கடந்த 13ம் தேதி நண்பர் மனோஜுடன் (25) வந்தபோது வெட்டி படுகொலை செய்யப்பட்டார். மனோஜுக்கும் வெட்டு விழுந்தது. இந்நிலையில் கோத்தகிரி பகுதியில் ஜோஸ்வா (23), கவுதம் (24) உட்பட 7 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அப்போது சிறப்பு எஸ்ஐ யூசுப்பை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓட முயன்ற ஜோஷ்வா, கவுதம் ஆகியோரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.
இருவரும் காயத்துடன் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். கைதான மற்ற 5 பேரையும் கோவை அழைத்து வந்தனர். அவர்களிடம் இருந்து 4 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில், கடந்த 2021 டிசம்பர் 20ம் தேதி இரவு ரத்தினபுரியை சேர்ந்த குரங்கு ஸ்ரீராம் (22) வெட்டிக்கொலை செய்யப்பட்டதற்கு பழிவாங்கவே கோகுல் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அவர்களின் தகவலின்படி கோவையை சேர்ந்த விக்ரம், விக்னேஷ் மற்றும் மீன்கடை கார்த்தி ஆகிய மேலும் 3 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். இவர்கள் 8 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஒருவர் சரண்: கோவை காந்திபுரம் 1-வது தொடர்ச்சியை சேர்ந்த ஞானசேகரன் (26) என்பவர் ஊட்டி போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.